பெங்களூரு,
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்த வழக்கு குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இளம்பெண், 2 முறை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் போலீசாரும் தொடர் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
கொரோனா பாதிப்பை காரணம் காட்டி ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராக போலீஸ் கமிஷனர் கமல்பந்திற்கு, பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒரு பரபரப்பு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
அதில், இந்த வழக்கில் சாட்சிகளை அழிக்க முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி முயற்சிக்கிறார். அதிகாரம் மற்றும் பண பலத்தை வைத்து சாட்சிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக எனக்கு ஆதரவாக இருக்கும் வக்கீல்கள் சூர்ய முகுந்த்ராஜ் மற்றும் ஜெகதீஷ்குமாருக்கு பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி வருகிறார். இந்த வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரிக்க வேண்டும். அவரை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும். அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவார். இவ்வாறு இளம்பெண் புகார் கூறியுள்ளார். இது ரமேஷ் ஜார்கிகோளிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.