மணப்பாறை,
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளி வாசல் கட்டிடத்தில், கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கியில் இருந்து நேற்று இரவு திடீரென அலாரம் ஒலித்தது. வங்கி நகரின் பிரதான சாலையில் அமைந்துள்ளதாலும், அருகில் போலீஸ் நிலையம் உள்ளதாலும் தொடர்ந்து அலாரம் ஒலித்துக் கொண்டிருந்ததை பார்த்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்து விட்டனரா? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
எலியால் ஒலித்த ஒலி
தகவலின்பேரில், அதிகாரிகள் விரைந்து வந்து வங்கியை திறந்து பார்த்தபோது கொள்ளையர்கள் யாரும் உள்ளே இல்லை. இதனால், அவர்கள் நிம்மதி அடைந்தனர். எலி ஒன்று அலாரத்தின் வயர் வழியாக சென்ற போது அலாரம் ஒலித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர், அலாரம் ஒலியை நிறுத்து விட்டு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.