மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 620 வழக்குகளில் தீர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 620 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் 5 சார்பு நீதிமன்றங்களில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதி ராஜ்மோகன் வரவேற்றார்.

இதில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஹேமலதா டேனியல், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நாராஜா, கூடுதல் சார்பு நீதிபதி ஸ்ரீராம், சிறப்பு சார்பு நீதிபதி (மோட்டார் வாகன விபத்து வழக்குகள்) பக்தவச்சலு, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சாதிக்பாஷா, நீதித்துறை நடுவர் விக்னேஷ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனர்.

620 வழக்குகள்

இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி சார்ந்த வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் என மொத்தம் 4 ஆயிரத்து 786 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதில் 620 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.3 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்து 697 இழப்பீடாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சையத்ரஷீத் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT