பணகுடி,
நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியில் வசிப்பவர் அலாசியஸ். இவருடைய மகன் மரிய மைக்கிள் வில்சன் (வயது 39). இவர் காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் லேப்-டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் கருவுற்ற மரிய மைக்கிள் வில்சனின் மனைவி பிரசவத்துக்காக, கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் மரிய மைக்கிள் வில்சன் மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக அங்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் மரிய மைக்கிள் வில்சனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் உள்ள 2 பீரோக்களை உடைத்து திறந்து, அதில் இருந்த 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று காலையில் மரிய மைக்கிள் வில்சன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், அதில் இருந்த 35 பவுன் நகை கொள்ளை போனதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.
போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு, மங்கம்மாள் சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.