பெங்களூரு,
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் ஜனதா தளம்(எஸ்) சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அரசியல் சாசனப்படி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ரூ.42 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். வளர்ச்சி திட்டங் களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சியான பா.ஜனதா, இந்த கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பல முறை கூறி இருக்கிறார்.
கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். எங்கள் கட்சியை சேர்ந்த நாகமங்களா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கவுடாவை பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு ரூ.30 கோடி கொடுப்பதாக பேரம் பேசியுள்ளனர்.
இதே போல் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எச்.கே.குமாரசாமி, சீனிவாசமூர்த்தி, தேவானந்த சவுகான் ஆகியோரிடமும் பா.ஜனதாவினர் பேரம் பேசி இருக்கிறார்கள். அதே போல் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், எம்.டி.பி.நாகராஜ், சிவள்ளி, ரமேஷ் ஜார்கிகோளி, ரகீம்கான் உள்ளிட்டோரிடமும் பா.ஜனதாவினர் பேரம் பேசி நெருக்கடி கொடுக்கிறார்கள்.
அரசியல் நெருக்கடியில் எம்.எல்.ஏ.க்கள் யாராவது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை கொடுத்தால் அதை நிராகரிக்க வேண்டும். குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.