விழுப்புரம்,
வானூர் அருகே திருவக்கரை பகுதியில் ஏராளமான கல்மரங்கள் உள்ளன. இந்த கல் மரங்களை பாதுகாக்கும் வகையில் இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் சார்பில் திருவக்கரையில் கல்மரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் மட்டுமின்றி திருவக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான கல் மரங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்துள்ளன. தற்போது இந்த பகுதிகளில் குவாரிகள் என்ற பெயரில் செம்மண் எடுக்கப்பட்டு வருகிறது. அதனுடன் கல்மரத்துண்டுகளும் எடுக்கப்பட்டு சிதைகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட செம்மண் விழுப்புரம்- விக்கிரவாண்டி ரெயில் பாதை மற்றும் விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது. அந்த செம்மண்ணில் கல்மரத்துண்டுகள் கிடக்கின்றன. அதுபோல் விழுப்புரம் அருகே ஆலாத்தூரில் சாலை பணிக்காக பயன்படுத்தப்பட்ட செம்மண்ணிலும் கல்மரத்துண்டுகள் கிடந்தன.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, இவ்வாறு ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் கல்மரத்துண்டுகளை சேகரித்து வைத்து விழுப்புரத்தில் கல்மரப் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், வானூரையொட்டியுள்ள திருவக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் செம்மண் குவாரிகளை தடை செய்வது குறித்து கனிம வளத்துறையிடம் ஆலோசனை செய்யப்படும்.
செஞ்சி பி.ஏரிக்கரை குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். தற்போது அங்கு தேங்கியுள்ள தண்ணீர் மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. இப்போது மழையில்லாததால் தண்ணீர் வடிந்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூடுதல் ஆட்சியரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.