மயிலாடுதுறை,
பெரம்பூர் அருகே பெருஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 41). விவசாயி. இவருடைய அண்ணன் ராஜா ஜெயக்குமார். இவர், மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பாரதிக்கும், அவரது அண்ணன் ராஜா ஜெயக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 11.7.2015 அன்று ஏற்பட்ட தகராறில் பாரதி, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ராஜா ஜெயக்குமாரை குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, பாரதி மீது மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த முதன்மை உதவி அமர்வு நீதிபதி கவுதமன், ராஜா ஜெயக்குமாரின் சகோதரர் பாரதிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.