சிக்கமகளூரு: என்.ஆர்.புராவில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாலியல் தொல்லை
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பிரபு நாயக் (வயது 40) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆசிரியர் பிரபு நாயக், உடற்பயிற்சி வகுப்பின்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மாணவிகளிடம் ஆபாசமாகவும், பாலியல் உணர்வை தூண்டும் வகையிலும் பிரபு நாயக் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர் மூலம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தனர். ஆனாலும் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
போக்சோவில் வழக்கு
இந்த சம்பவம் குறித்து வட்டார கல்வி அதிகாரி துர்கப்பாவிடம் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதனை விசாரித்த அவர், ஆசிரியர் பிரபு நாயக்கிற்கு 10 நாட்கள் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பி விட்டார். மேலும் ஆசிரியர் பிரபு நாயக் மீண்டும் பள்ளிக்கு வரக்கூடாது என்றும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தினர்.
இதையடுத்து சம்பவம் குறித்து வட்டார கல்வி அதிகாரி துர்கப்பா, என்.ஆர்.புரா போலீசில் ஆசிரியர் பிரபு நாயக் மீது புகார் கொடுத்தார். இதுபற்றி அறிந்ததும் ஆசிரியர் பிரபுநாயக் தலைமறைவாகி விட்டார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் என்.ஆர்.புரா துணை போலீஸ் சூப்பிரண்டு சுருதி, அரசு பள்ளிக்கு சென்று மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர், தலைமறைவாக உள்ள ஆசிரியர் பிரபு நாயக்கை கைது செய்து அவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.