ஆண்டிப்பட்டி,
கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் கடந்த சில நாட்களாக கோம்பைத்தொழு கிராமத்தில மர்ம நோய் தாக்கி ஆடுகள் பலியாகி வருகின்றன.
இந்த நோய் தாக்கப்படும் ஆடுகளுக்கு முதலில் கால்களில் கொப்பளங்கள் ஏற்படுகிறது. பின்னர் ஆடுகள் 2 அல்லது 3 நாட்கள் வரை உணவு உண்ணாமல் இறந்து விடுகின்றன.
இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஜெகன், குருசாமி, தவமணி உள்ளிட்டோரின் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்ம நோய் தாக்கி இறந்துள்ளன. இதுகுறித்து கால்நடை துறை டாக்டர்களுக்கு கிராம மக்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று நோய் தாக்கிய ஆடுகளுடன் கோம்பைதொழு கால்நடை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோம்பைத்தொழு கால்நடை மருத்துவமனைக்கு கடந்த ஒரு ஆண்டாக டாக்டர் வருவதில்லை.
தற்போது பரவி வரும் மர்ம நோயால் ஆடுகள் இறந்து வருகின்றன. இதனால் கோம்பைத்தொழு கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர் தினமும் வந்து செல்ல வேண்டும்.
மேலும் தற்போது பரவி வரும் மர்ம நோயை கட்டுப்படுத்த கோம்பைத்தொழு கிராமத்தில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என கூறினர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.