மாவட்ட செய்திகள்

கொளத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி 2 மாணவர்கள் பலி

கொளத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி 2 மாணவர்கள் பலியானார்கள்.

கொளத்தூர்,

கொளத்தூர் அருகே உள்ள சின்னமேட்டூரை சேர்ந்தவர் தங்கராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 16). வெடிக்காரனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் அரவிந்த் (16). நண்பர்களான தினேஷ் குமார், அரவிந்த் இருவரும் கொளத்தூரில் உள்ள நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தினேஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில், நண்பர் அரவிந்த்தை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் கொளத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

கொளத்தூர் அருகே ஏரிக்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்றுமுன்தினம் நள்ளிரவு தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரக்கு ஆட்டோ மோதி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT