ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரத்தை அடுத்து உள்ள அரண்மனை புதூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கபாதை வழியாக பாறையூர் மற்றும் தோட்டத்து சாலை வீடுகளில் வசிக்கும் கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அரண்மனை புதூர் மற்றும் பாறையூர் கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் ரெயில்வே தண்டவாளத்தில் அரண்மனைப்புதூர் அருகே நேற்று மாலை 4 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தகவலறிந்த வேலுச்சாமி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, இ.பெரியசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களுடன் சேர்ந்து ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ரெயில்வே மண்டல பொறியாளர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணப்படும். தற்பாது தேங்கியுள்ள தண்ணீரை உடனே மோட்டார் மூலம் அகற்றப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
மறியல் காரணமாக ஒட்டன்சத்திரத்துக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு வரவேண்டிய அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் பாலக்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு பிறகு அந்த வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.