துமகூரு,
துமகூரு மாவட்டம் சிரா-இரியூர் ரோட்டில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிரா தாலுகா மானங்கி மேம்பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவரில் மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதுபற்றி அறிந்தவுடன் தாவரகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் பயணித்த 5 பேரில் 2 பேர் படுகாயம் அடைந்து இறந்ததும், 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவதும் தெரியவந்தது. இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரையும் போலீசார் மீட்டு துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இறந்துபோன 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பெங்களூரு முனிகொலல்லாவை சேர்ந்தவர்களான சேத்தன்(வயது 25), லிகித்(20) மற்றும் கே.ஆர்.புரத்தில் உள்ள அய்யப்பாநகரில் வசித்து வந்த வினய்(28) ஆகியோர் இறந்தது தெரியவந்தது. இதில் வினய் காரை ஓட்டியதும், கல்லூரி மாணவரான லிகித் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் காரில் பயணித்த பெங்களூரு புவனேஸ்வரி லே-அவுட்டை சேர்ந்த ஹேமந்த்(28), மாரத்தஹள்ளியை சேர்ந்த லோகித்(26) ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதுபற்றி தாவரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.