ஆலோசனை
கவர்னர் கிரண்பெடி மாநிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் ரவி பிரகாஷிடம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் கலந்து கொண்டார். மேலும் துறையின் அதிகாரிகள் காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி கூறியதாவது:-
பாகூர் ஏரி
நிலத்தடி நீரை நம்பியிருக்கும் புதுவையில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே குடிநீருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. குடிநீர் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது குடிநீர் வடிகால் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.பாகூர் ஏரியை அபிவிருத்தி செய்தல், அழகுபடுத்துதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். ஏரிக்கரையில் சிறுவர் பூங்கா, பறவைகள் பூங்கா, உணவகம், கழிப்பறை வசதி உருவாக்கப்பட வேண்டும்.
இந்த கட்டுமான பணிகளில் கான்கிரீட் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். இந்த திட்டத்திற்கான செயல்பாடுகள் குறித்து துறையின் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பழமையான மூலநாதர் கோவிலை பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும். சுற்றுலா, வனம் மற்றும் மீன்வளத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பணி ஆணை
துறையின் செயலாளர் ரவி பிரகாஷ் கூறும் போது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள கிராமப்புறங்களை மேம்படுத்த இந்த துறை பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளது. மத்திய நிதி உதவியில் செயல்படுத்தப்படும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாகூர் ஏரியில் பணிகள் நடைபெற உள்ள இடத்திற்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்ய வேண்டும்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன் பணி ஆணை வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்