திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மறு சுழற்சி செய்யப்படக்கூடிய பொருட்கள் மற்றும் மறுசுழற்சிக்கு உதவாத பொருட்கள் என பிரிக்கப்படுகிறது. நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்க கார்த்திகேயபுரம் பஞ்சாயத்தில் 4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை திருத்தணி நகராட்சிக்கு வருவாய்துறையினர் ஒதுக்கி அரசாணை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று குப்பை தரம் பிரிக்கும் நிலையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்காக திருத்தணி நகராட்சி கமிஷனர் ராமஜெயம் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகேயபுரம் பகுதிக்கு சென்று வேலைகளை தொடங்க முயன்றனர்.
அப்போது கார்த்திகேயபுரம் ஒன்றியகுழு உறுப்பினர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி அதிகாரிகளிடம் திருத்தணி நகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம், மக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் நீர்நிலைகள் அருகில் அமைவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. துர்நாற்றம் ஏற்பட்டால் தொற்றுநோய் பரவும் எனவே இதனை அடியோடு நிறுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்ய முயற்சி செய்தும் அவர்கள் ஏற்கவில்லை, இதனால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி தெரிவித்ததாவது:-
கார்த்திகேயபுரம் பஞ்சாயத்தில் திருத்தணி நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகளை தரம் பிரித்து பிளாஸ்டிக் பொருட்களை அரியலூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து குப்பைகளை தரம்பிரிக்க மட்டுமே பயன்படுத்தபடும். இதனால் நோய்தொற்று மற்றும் துர்நாற்றம் வீச வாய்ப்பில்லை, மக்கள் எதிர்ப்பு குறித்து ஆர்.டி.ஒ.விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கார்த்திகேயபுரம் கிராம மக்களிடம் ஆர்.டி.ஓ. தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்பட்டுள்ளதாக தெரிவித்தார்.