கடலூர்,
புதுச்சேரி நெல்லித்தோப்பு பவளநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(வயது 57). உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆன இவர் புதுச்சேரி கவர்னரின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
கடலூர் திருவந்திபுரத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கிருஷ்ணராஜ், தனது நண்பரான புதுச்சேரி மூலகுளத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று காலை புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை ராமமூர்த்தி ஓட்டினார். கிருஷ்ணராஜ் பின்னால் அமர்ந்திருந்தார்.
கடலூர் கம்மியம்பேட்டை பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணராஜ், ராமமூர்த்தி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்கள் இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே கிருஷ்ணராஜ் பரிதாபமாக இறந்தார். ராமமூர்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கிருஷ்ணராஜின் மகன் சதீஷ்குமார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.