மாவட்ட செய்திகள்

தேர்தல் நடத்தை விதி மீறல்: பெட்ரோல் ‘பங்க்’களில் மோடியின் பேனர்களை அகற்றுங்கள்; தேர்தல் கமிஷனுக்கு, காங்கிரஸ் கடிதம்

தேர்தல் நடத்தை விதியை மீறி பெட்ரோல் ‘பங்க்’களில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் பேனர்களை அகற்றுமாறு தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்தநிலையில், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி பிரதமர் மோடியின் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் மராட்டிய தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த சனிக்கிழமை அன்றே மராட்டியம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இதையடுத்து அரசியல் தலைவர்களின் பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு விட்டன.

ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பொறித்த பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும். எனவே இவற்றை எல்லாம் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே பேனர் மற்றும் பதாகைகள் விஷயங்களில் மற்ற அரசியல் தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும் தேர்தல் கமிஷன், பிரதமர் மோடி விஷயங்களில் மட்டும் மென்மையான போக்கை கையாளுவதாக சச்சின் சாவந்த் குற்றம்சாட்டி உள்ளார்.

SCROLL FOR NEXT