மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் அரசு விடுமுறையை மீறி இயங்கிய பள்ளி; பா.ஜ.க.வினர் முற்றுகை

திருவள்ளூரில் அரசு விடுமுறையை மீறி இயங்கிய பள்ளியை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

பா.ஜ.க. முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு நேற்று அரசு விடுமுறை அளித்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று விடுமுறை அளிக்கவில்லை. பள்ளி மாணவர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர். இதை அறிந்த பா.ஜ.க.வினர் நேற்று பா.ஜ.க. திருவள்ளூர் நகர தலைவர் வி.எஸ்.ரகுராமன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, கருணாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்யா சீனிவாசன், பொதுச்செயலாளர்கள் மதுசூதனன், ராஜ்குமார், சுகதேவ், கோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு விடுமுறையை மீறி இயங்கிய அந்த பள்ளியை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு நிர்வாகத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT