மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர்- மினிபஸ் மோதல்: பாலிடெக்னிக் மாணவர் பலி

பேராவூரணி அருகே ஸ்கூட்டர் மீது மினிபஸ் மோதியதில் பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சையதுமுகமது. இவருடைய மகன் அபுதாகீர்(வயது18). பாலிடெக்னிக் மாணவரான இவர் நேற்று முன்தினம் முடச்சிக்காடு பகுதியில் இருந்து தனது ஸ்கூட்டரில் பேராவூரணி கடைவீதிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி சென்றபோது, பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு நோக்கி வந்த மினி பஸ், அபுதாகீர் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் மினிபஸ் சக்கரத்தில் சிக்கிய அபுதாகீர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அபுதாகீர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT