ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள புன்னக்காயல் தெற்கு தெருவை சேர்ந்தவர் வில்ஜியூஸ் லோபோ. இவர் சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லியோஜா. இவர்களுடைய மகன் வில்பன் லோபோ (வயது 21). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் எம்.வி.ஹல் விட்டா என்ற கப்பலில் எந்திர பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.
கப்பலில் இருந்து தவறி விழுந்தார்
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு வில்பன் லோபோ நைஜீரியா நாட்டு கப்பலில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து விட்டதாக மும்பையில் உள்ள அலுவலகம் மூலம் தந்தை வில்ஜியூஸ் லோபோவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுதொடர்பாக புன்னக்காயலில் உள்ள கப்பல் மாலுமிகள் சங்கத்தினர், மும்பையில் உள்ள அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத்தை தொடர்பு கொண்டு, தவறிய மாலுமியை தேடும் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தினர்.
மேலும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோரையும் தொடர்பு கொண்டு மாலுமியை கண்டுபிடிக்க வலியுறுத்தி உள்ளனர்.
உடல் கரை ஒதுங்கியது
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி காலையில் அதே பகுதியின் கரையில் வில்பன் லோபோவின் உடல் ஒதுங்கியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மாலுமியின் பெற்றோர் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். அவரது குடும்பத்தினர் புன்னக்காயலில் கடந்த 16 நாட்களாக கண்ணீருடன் உள்ளனர்.