திருச்சி,
திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி தண்ணீர் வந்தடைகிறது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆறு மூலமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மட்டும் முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. கொள்ளிடம் தடுப்பணையில் தென்பகுதியில் 45 மதகுகள் உள்ளன. வடபகுதி 10 மதகுகளை கொண்டதாகும். ஒவ்வொரு மதகின் நீளம் 12 மீட்டர்.
இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இரவு முக்கொம்பு மேலணை பகுதியில், கொள்ளிடம் பாலத்துடன் கூடிய அணையில் 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் உடைந்து கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டன. சேதமடைந்த பகுதியின் மொத்த நீளம் 108 மீட்டர் ஆகும். காவிரி ஆற்றில் மேட்டூரில் இருந்து தண்ணீர் வரத்து பெருமளவு குறைந்ததால் தற்போது முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீரின் அளவும் வெகுவாக குறைந்து விட்டது.
இதனால், காவிரி ஆறு மூலமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கு செல்லும் நீரில் எந்த பிரச்சினையும் இல்லை. தேவையான அளவு தண்ணீரை வெளியேற்றுவதற்கான வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுவதற்காகவே கொள்ளிடம் ஆறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தற்போது 9 மதகுகள் உடைந்தாலும் உபரிநீர் வெளியே செல்வதில் எந்த சிரமும் இல்லை. குறைந்த அளவே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேறி வருவதால் கரையோர கிராம மக்களுக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை.