பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள செம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி லதா(வயது 48). இவர்களுக்கு லலிதா(27) என்ற மகளும், வேல்முருகன்(25), வேல்மணி(21) என்ற 2 மகன்களும் இருந்தனர். லலிதா திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லதா தனது மகள் வீட்டுக்கு சென்றார். வீட்டில் வேல்முருகன், வேல்மணி மற்றும் அவர்களது பாட்டி அம்புஜம் ஆகியோர் இருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை வேல்முருகன் வீட்டில் இருந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மாளிகைகோட்டத்தை சேர்ந்த தனது நண்பர் விமல் என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் இருவரும் மாளிகைகோட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் வேல்முருகன், டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் வேல்முருகன் மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் விமல் தனது மினிலாரியில் வேல்முருகனையும், அவரது மோட்டார் சைக்கிளையும் ஏற்றிக் கொண்டு நள்ளிரவில் செம்பேரிக்கு சென்றார். பின்னர் வேல்முருகனை அவரது வீட்டில் இறக்கி விட்டு விட்டு, விமல் அங்கிருந்து சென்று விட்டார். அப்போது, வேல்முருகன் இறந்த கிடந்ததை கண்டு, அம்புஜம் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அறிந்ததும் லதாவும் விரைந்து வந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசில் லதா புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.