திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46). இவரது மனைவி இறந்துவிட்டார். இதனால் தனது மகன் பாலமுருகனுடன் அவர் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான வீட்டில் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜ் (46) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த நிலையில், தியாகராஜ், வீட்டுக்கு மின்சார கட்டணம் செலுத்தவில்லை என தெரிகிறது.
இதுபற்றி வடிவேல் அவரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வடிவேலு வீட்டில் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வடிவேல், மின்சார கட்டணம் செலுத்தாதது பற்றி கேட்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜ், அங்கிருந்த கடப்பாரையால் வடிவேல் தலையில் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத்தொடர்ந்து தியாகராஜ் அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர் நேற்று வடிவேல் உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் விரைந்து சென்று வடிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளவேடு அருகே பதுங்கி இருந்த தியாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.