நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் 173 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 25 பயனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் மற்றும் கல்வி உதவித்தொகையாக 4 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், 1 பயனாளிக்கு ஆயிரம் என மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும், வருவாய்த்துறை சார்பில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் விபத்து நிவாரண தொகைக்கான காசோலையினையும், சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகை பெற ஆணையினையும் கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சப்-கலெக்டர் (சமூகப்பாதுகாப்பு திட்டம்) வேலுமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரிய ஜோசப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.