முத்தூர்,
திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே மூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் அர்ஜூனன்(வயது 53). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். தற்போது நெல் அறுவடை நடந்ததையொட்டி வைக்கோல்களை 45 கட்டுக்களாக கட்டினார்.
பின்னர் அந்த வைக்கோல்களை அர்ஜூனன் தனக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். செங்கனங்காடு என்ற இடத்தில் டிராக்டர் நேற்று மதியம் 2.30 மணியளவில் சென்ற போது மின்வயரில் வைக்கோல் உரசியதாக தெரிகிறது. இதில் வைக்கோல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதை பார்த்த அர்ஜூனன் டிராக்டரை நிறுத்தி, வைக்கோல் கட்டுக்களை சாலையோரம் தள்ளி விட்டார். இதனால் டிராக்டர் தீ விபத்தில் இருந்து தப்பியது.
சாலையில் விழுந்து கிடந்த வைக்கோல் போர் தொடர்ந்து மளமளவென தீ பற்றி எரிந்தது. அர்ஜூனன் வைக்கோலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 45 வைக்கோல் கட்டுக்களும் எரிந்து சாம்பல் ஆனது. இந்த சம்பவம் முத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.