நீடாமங்கலம்,
வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டு நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர், சாலைகளில் வழிந்தோடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. குறிப்பாக நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் கொட்டையூர் சர்வமான்யம், வையகளத்தூர் மேம்பாலம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதே போல கடந்த 2 நாட்களாகவே வையகளத்தூர் மேம்பாலம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வழிந்தோடியது.
இதனையடுத்து நேற்று வையகளத்தூர் மேம்பாலம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக நீடாமங்கலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி தஞ்சாவூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நீடாமங்கலம் அண்ணாசிலை வழியாக மன்னார்குடி, லெட்சுமாங்குடி சென்று பின்னர் மேற்கண்ட ஊர்களுக்கு சென்றன.
அதேபோல் வேளாங் கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், கொரடாச்சேரி வழியாக பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் லெட்சுமாங்குடி, மன்னார்குடி, நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்பட்டன. சில வாகனங்கள் மன்னார்குடியில் இருந்து வடுவூர் வழியாக தஞ்சாவூருக்கு சென்றன.மாலை வரை இந்த பணி நடைபெற்றது.