பண்ருட்டி,
டெல்டா பிரிவு போலீசாரும், பண்ருட்டி போலீசாரும் இணைந்து பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 6 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார், பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் அதை கடத்தியதாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் யுவராஜ்(வயது 35), வாணியர் தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் சீனுவாசன்(33), கொரத்தி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் செந்தில்குமார்(33) ஆகியோர் என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்சில் குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரைகைது செய்தனர். மேலும் ஒருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.