நெல்லை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 5-ந் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ரெயில் மறியல், சாலை மறியல் போராட்டங்கள் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
அன்று மாலையில் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே கோவைகுளம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி செல்வம் (வயது 40) என்பவர் நெல்லையில் இருந்து கோவைகுளத்துக்கு தனியார் பஸ்சில் சென்றார். டக்கரம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்றபோது செல்வம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார். பின்னர் திடீரென்று அவர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சக பயணிகள் படுகாயம் அடைந்த செல்வத்தை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி செல்வம் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெல்லையில் தொழிலாளி ஒருவர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.