காஞ்சீபுரம்,
காஞ்சி சங்கரமடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த மாதம் 28-ந்தேதி காலையில் முக்தியடைந்தார். இந்த மாதம் 1-ந்தேதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது மடாதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளார்.
முக்தியடைந்த ஜெயேந்திரரின் முதலாவது ஆராதனை வருகிற 13-ந்தேதி காஞ்சி சங்கரமடத்தில் வைதீக முறைப்படி நடைபெறும்.
இது தவிர நாடு முழுவதும் உள்ள மடத்தின் கிளைகளில் ஜெயேந்திரரின் படங்கள் வைக்கப்பட்டு தினமும் நாம சங்கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 70-வது மடாதிபதியாக பணியாற்ற தொடங்கி இருக்கிறார் என்ற விவரத்தை கடிதம் மூலம் தெரிவித்து உள்ளோம்.
காஞ்சி காமகோடி பீடத்தில் சங்கராச்சாரியாராக இருப்பவர்தான் காமாட்சியம்மன் கோவிலில் பரம்பரை தர்மகர்த்தா ஆவார். ஆகவே விஜயேந்திரர் காமாட்சியம்மன் கோவிலில் பரம்பரை தர்மகர்த்தாவாக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.