மாவட்ட செய்திகள்

காந்தி சிலையிடம் மனு கொடுத்த கிராம மக்கள்

வேடசந்தூர் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலையிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்:

வேடசந்தூர் அருகே உள்ள நாகக்கோணனூர் கிராமத்தை சேர்ந்த சிலர், திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மேலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஒரு தலைமை ஆசிரியரும், தலைமை ஆசிரியையும் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடுவதாகவும், எனவே 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க வந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

ஆனால் மனுவை வாங்காமல், கிராம மக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தங்களுடைய மனுவை காந்தி சிலையின் அருகில் வைத்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் முதன்மை கல்வி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT