மாவட்ட செய்திகள்

ஜனதாதளம் எஸ் கட்சியில் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது? - தேவேகவுடா தலைமையில் தீவிர ஆலோசனை

ஜனதா தளம் எஸ் கட்சியில் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து தேவேகவுடா தலைமையில் தீவிர ஆலோசனை நடைபெற்றது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா ஆட்சிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

முதல்-மந்திரி உள்பட மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் 22 பதவிகள் காங்கிரசும், 12 பதவிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்து கொண்டுள்ளன. மந்திரிசபை விரிவாக்கம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் இன்னும் 2 நாட்கள் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தேவேகவுடாவின் வீட்டில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேவேகவுடா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மந்திரிசபை விரிவாக்கம் செய்வது, ஜனதா தளம்(எஸ்) கட்சியில் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மூத்த எம்.எல்.ஏ.க்கள் ரேவண்ணா, ஜி.டி.தேவேகவுடா, எச்.விஸ்வநாத், ஏ.டி.ராமசாமி, சா.ரா.மகேஷ், பண்டப்பா காசம்பூர் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மிக முக்கியமான இலாகாவான நிதித்துறை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த நிதித்துறையை குமாரசாமி தன் வசம் வைத்துக்கொண்டு நிர்வகிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT