நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
பெண் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள என்.ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 48). இவரது மனைவி வீருசின்னம்மாள் (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி 2 பேரும் குடும்பத்துடன் நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் தங்கி விவசாய வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் வீருசின்னம்மாளின் நடத்தையில் முனியாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் முனியாண்டி வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகு முனியாண்டி வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீருசின்னம்மாள் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முனியாண்டி அபயகுரல் எழுப்பினார். உடனே அங்கு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அப்போது தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாக முனியாண்டி அழுதுபுரண்டார்.
போலீசாருக்கு சந்தேகம்
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீருசின்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது வீருசின்னம்மாளின் சாவில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது கணவர் முனியாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். அப்போது தான் அவரே தனது மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.
கழுத்தை நெரித்து கொலை
இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், வீருசின்னம்மாளின் நடத்தையில் முனியாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முனியாண்டி, தனது மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை முனியாண்டி மின்கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் வீருசின்னம்மாளை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் வீடு திரும்பிய அவர் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினார் என்றனர். இதையடுத்து முனியாண்டியை போலீசார் கைது செய்தனர்.
மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய சம்பவம் நிலக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.