பொள்ளாச்சி,
பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு, சுல்தான் பேட்டை பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
தற்போது இளநீர் உற்பத்தி அதிகம் உள்ள பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுவதால் இளநீர் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது கடும் வெயில் மற்றும் அரசியல் கட்சியினரின் தீவிர தேர்தல் பிரசாரம் காரணமாக இளநீரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அதன் விலையும் உயர்ந்து வருகிறது. இது குறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
இந்த பகுதியில் உள்ள நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் ரூ.1 உயர்த்தப்பட்டு ரூ.29 என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இது கடந்த வாரத்தைவிட ரூ.1 அதிகம் ஆகும். அதுபோன்று ஒரு டன் இளநீரின் விலை ரூ.10 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது இளநீர் வரத்து குறைந்து தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.
மேலும் வெளியூர்களுக்கு தேவையான அளவு இளநீர் அனுப்ப முடியவில்லை. அதுபோன்று வியாபாரிகளே விலையை உயர்த்தி இளநீரை கொள்முதல் செய்கிறார்கள்.
தொடர்ந்து இளநீரின் விலை ஏறுமுகமாகவே இருக்கும். எனவே விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.