செங்கல்பட்டு மாவட்டம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உள்ள புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் என்று புகார் செய்தார்.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் விருதுநகரை சேர்ந்த முனீஷ்வரன் (வயது 23) என்பவர் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.