தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை அடுத்த மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை கிராமிய துணைபோலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தானிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் உள்ளிட்ட போலீஸ் குழுவினர் ஆத்திப்பாடி மலை கிராமத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் காட்டுப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்ததில் அவர் 300 கிராம் கஞ்சா மற்றும் 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாலுகா தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கஞ்சா மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.