பெங்களூரு,
குழந்தைகளுக்கான தடுப்பூசி தற்போது 3-ம் கட்ட சோதனையில் உள்ளது. இது மூக்கு வழியாக சொட்டு மருந்து ரீதியில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த சோதனை முடிவடைந்ததும், அதன் அடிப்படையில் அந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும். கடந்த செப்டம்பர் மாதம் 2.48 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சமூகத்தினர், மது பழக்கம் உள்ளவர்கள் உள்பட 15 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.
அத்தகைய மக்களை தடுப்பூசி பக்கம் இழுக்க சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த சமூகங்களின் மடாதிபதிகள் மூலம் அவர்கள் சார்ந்த மக்களிடம் தடுப்பூசி குறித்து எடுத்து கூறப்பட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. அதனால் திருவிழா, பண்டிகை நேரங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 250-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய மைசூரு பகுதியுடன் ஒப்பிடுகையில் வட கர்நாடகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
கர்நாடகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 1-ம் வகுப்பு முதலே பள்ளிகளை திறந்திருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். இதுகுறித்து கல்வித்துறை ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.