தேசிய செய்திகள்

கார்ட்டூன் படக்காட்சியை பார்த்து தனது உடலில் தீ வைத்து கொண்ட 12 வயது சிறுவன் உயிரிழப்பு

தொலைக்காட்சியில் கார்ட்டூன் படத்தில் வரும் காட்சியை பார்த்து தனது உடலில் தீ வைத்து கொண்ட 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

ஐதராபாத்,

தொலைக்காட்சிகளில் வரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை குழந்தைகள் அதிகம் விரும்புவது வழக்கம். கார்ட்டூன் நாயகர்களின் டாட்டூக்கள், தொப்பிகள், டிசர்ட்டுகள் என பல்வேறு பொருட்களை விரும்பும் குழந்தைகளும் உள்ளனர்.

சிலர் தங்களை கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் வரும் கதாபாத்திரங்களாகவே கருதி கொண்டு அத்துமீறி செயல்படுவதுமுண்டு.

தெலுங்கானாவில் இதுபோன்ற நடந்த ஒரு நிகழ்வில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் விடுமுறை கொண்டாட்டத்திற்காக தனது தாத்தா-பாட்டி வீட்டிற்கு சென்றிருக்கிறான் ஜெயதீப் மடுகுலா என்ற சிறுவன். கடந்த ஜூன் 1ந்தேதி காலையில் தொலைக்காட்சியில் கார்ட்டூன் திரைப்படம் ஒன்றை பார்த்து கொண்டு இருந்துள்ளான்.

அதன்பின்னர் அந்த படத்தில் வரும் காட்சியை போன்று தனது உடலில் தீ வைத்து கொண்டு இருக்கிறான். அவனது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த தாத்தா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு ஜெயதீப்பை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை அடுத்து ஒஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த சிறுவன் சிகிச்சையின்பொழுது இன்று உயிரிழந்துள்ளான்.

அந்த சிறுவனின் தாத்தா கூறும்பொழுது, கார்ட்டூன் திரைப்படத்தில் வருவது போன்று நானும் எரிந்து கொண்டிருக்கிறேன் என ஜெயதீப் கத்தினான். ஆனால், கார்ட்டூன் படத்தில் வரும் ஏதோவொரு கதாபாத்திரம் போன்று அவன் தீ வைத்து கொண்டானா? என எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

அவன் ஏன் இப்படி செய்து கொண்டான் என்பதற்கான எந்த காரணமும் எங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் வழக்கு ஒன்று பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT