மும்பை,
புல்லெட் ரயில் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா கட்சி, இந்த திட்டம் எளிய மனிதனின் கனவு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா அண்மைக் காலமாக பாரதீய ஜனதா அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இணைந்து அகமதாபாத்- மும்பை இடையேயான புல்லெட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினர்.
இந்த நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:-புல்லெட் ரயில் நாட்டின் தேவைக்கு பொருத்தமானதுதானா? பல ஆண்டுகளாக கடனை தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
யாருமே புல்லெட் ரயிலை கேட்கவில்லை. மோடியின் கனவு, எளிய மனிதனை பற்றியது அல்ல. பெரும் தொழில் அதிபர்கள் பணக்கார்களை பற்றியது ஆகும். புல்லெட் ரயில் திட்டம் வேலை வாய்ப்பு உருவாக்கும் என்று கூறுபவர்கள் தவறான கருத்தை கூறுகின்றனர். ஏனெனில், ஜப்பான், இயந்திரங்களில் இருந்து தொழிலாளர்கள்வரை தங்கள் நாட்டில் இருந்து இங்கு கொண்டு வருகிறது இவ்வாறு அதில் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.