புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது மேற்கு வங்காளம் மாநிலத்தின் மோய்ரா மற்றும் மதுஜோரே ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. முறைகேடாக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. நிலக்கரித்துறை முன்னாள் செயலர் எச்.சி. குப்தா உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் குற்றச்சதி நடந்துள்ளதை உறுதிப்படுத்திய சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பாரத் பராஷார், முன்னாள் நிலக்கரித்துறை செயலர் எச்.சி.குப்தா, விகாஸ் மெட்டல்ஸ் அன்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விகாஸ் பாட்னி, அதே நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் மாலிக், ஓய்வு பெற்ற நிலக்கரித்துறை அதிகாரி கே.சி.சம்ரியா மற்றும் நிலக்கரித்துறை முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோப்பா ஆகியோரை இன்று குற்றவாளிகளாக அறிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நிலக்கரித்துறை செயலர் எச்.சி.குப்தா, அதிகாரிகள் குரோப்பா, கே.சி. சம்ரியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், மேலும் விகாஸ் பாட்னி, ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி பாரத் பராஷார் தீர்ப்பு வழங்கினார். விகாஸ் மெட்டல்ஸ் மற்றும் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.