புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என வாதிட்டார்.
இதை மறுத்த கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், கார்த்தி சிதம்பரத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு எவ்வித சம்மனும் கிடைக்கப்பெறவில்லை. அவருக்கு அனுப்பிய சம்மன் ஏதாவது இருந்தால் காண்பிக்கச் சொல்லுங்கள் என வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காதது குறித்து தனியாக மனு தாக்கல் செய்யுங்கள் என்று கூறிய நீதிபதிகள், அவர், பிணைத்தொகையாக ரூ.1 கோடி செலுத்திவிட்டு அக்டோபர் 25 (நேற்று) முதல் நவம்பர் 21-ந்தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதிக்கிறோம் என உத்தரவிட்டனர்.