புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகளால் பள்ளிகள், திரையரங்குகள், மதவழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டன. ஊரடங்கால் பல்வேறு மதம் சார்ந்த பண்டிகை கொண்டாட்டங்களும் முடங்கின.
இந்த நிலையில், ஆண்டு தொடக்கத்தில் சரிவை நோக்கி சென்ற தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உச்சமடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.
தலைநகர் டெல்லியிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் முகக்கவசம் அணிவது, சமூக தூரத்தை பராமரிப்பது போன்ற கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் இந்த உத்தரவு ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.