புதுடெல்லி,
வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறும் வகையிலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள தரச் சான்று விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ய அனுமதித்ததற்காக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராத தொகையை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் விதித்தது.
மேலும், பிளிப்கார்ட் நிறுவன தளத்தில் விற்கப்படும் 598 பிரஷர் குக்கர்களைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அந்த பிரஷர் குக்கர்களை திரும்பி வாங்கிக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு அவற்றின் விலையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தக்கல் செய்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தை கோர்ட்டு கண்டித்தது.
மேலும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதித்தபடி உரிய நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது.பிஐஎஸ் முத்திரை இல்லாமல் பிரஷர் குக்கர்களை விற்றதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது செல்லும். பிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்திலிருந்து பழுதடைந்த குக்கர்களை வாங்கிய நுகர்வோருக்கு உரிய பதிலை அறிவிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.