தேசிய செய்திகள்

பகவத்கீதைக்கு எதிரான சிவராஜ் பட்டீல் கருத்து ஏற்கத்தக்கது அல்ல - காங்கிரஸ் விளக்கம்

சிவராஜ் பட்டீல், பகவத் கீதை குறித்து கூறியதாக வெளியான கருத்துகள் ஏற்புடையவை அல்ல என்று காங்கிரஸ் விளக்கம் விளக்கமளித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் மாசினா கித்வாய் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில், முன்னாள் மத்திய உள்துறை மந்திரியும், முன்னாள் கவர்னருமான சிவராஜ் பட்டீல் கலந்து கொண்டார். அதில் பேசுகையில், ''ஜிகாத் என்னும் புனித போர் தத்துவம், இஸ்லாம் மதத்தில் மட்டுமின்றி, பகவத் கீதையிலும், கிறிஸ்தவ மதத்திலும் கூட இருக்கிறது'' என்று அவர் கூறினார்.

 இதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்தது.

இந்தநிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எனது மூத்த தோழர் சிவராஜ் பட்டீல், பகவத் கீதை குறித்து கூறியதாக வெளியான கருத்துகள் ஏற்புடையவை அல்ல. இதுபற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரசின் நிலைப்பாடு தெளிவானது.

இந்திய நாகரிகத்தின் முக்கியமான அடித்தள தூண், பகவத் கீதை. முன்னாள் பிரதமர் நேரு தனது 'டிஸ்கவரி ஆப் இந்தியா' புத்தகத்தில், பகவத் கீதை அனைத்து வகுப்பினருக்கான பொதுத்தன்மை கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT