பெங்களூரு,
பெண் பத்திரியாளர் கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் மாதம் 5ந் தேதி பெங்களூருவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு(எஸ்.ஐ.டி.) அமைத்துள்ளது. அந்த குழு கொலையாளிகளை கண்டுபிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியும் இதில் தொடர்பு உடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி சிக்பள்ளாபூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது. அதுபற்றி உங்களிடம்(நிருபர்கள்) கூற முடியாது.
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை ஒன்று திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது போதுமான ஆவணங்கள் இல்லாவிட்டால் அந்த வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அதனால் சரியான ஆவணங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.