தானே,
அயோத்தியில் ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்திருந்த பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்குகளை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வு விசாரித்து, 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
அதில், பிரச்சினைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து பல தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர். இந்த மேல்முறையீடு வரும் 8-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஷியா வக்பு வாரிய தலைவர் வாசீம் ரிஸ்வி, சர்ச்சைக்குரிய இடத்தில் நேற்று முன் தினம் தொழுகை நடத்தினார். தொடர்ந்து ராம ஜென்ம பூமி தலைமை குரு ஆச்சாரியா சத்யேந்திர தாசை சந்தித்தார். அதன்பிறகு அவர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதை எதிர்ப்பவர்கள், பாபர் மசூதி கட்ட வேண்டும் என்று கூறுகிறவர்கள் பாகிஸ்தானுக்கு அல்லது வங்கதேசத்துக்கு போகட்டும். அவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும், அடிப்படைவாத மத குருமார், நாட்டை அழிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் செல்லட்டும் என்றும் தெரிவித்தார். ஷியா பிரிவு முஸ்லீம்கள் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவித்த நிலையில், சன்னி பிரிவு முஸ்லீம்களும் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புவதாக மத்திய மந்திரி கிரிராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி கிரிராஜ் சிங் நேற்று முன்தினம் தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர், நிருபர்களை சந்தித்த அவர், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஷியா முஸ்லிம் பிரிவினர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்தனர். சன்னி முஸ்லிம்களும் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார். அத்துடன், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.