புதுடெல்லி,
தற்போதைய நிலையில் நாட்டின் காப்பீட்டு துறையில் 74 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியும். அதேநேரம் எல்.ஐ.சி.க்கு தனி சட்டம் இருப்பதால் இந்த விதிமுறை அமல்படுத்த முடியாது. ஆனால் எல்.ஐ.சி.யிலும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இது தொடர்பாக நிதி சேவைத்துறை மற்றும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத்துறை இடையே கடந்த சில வாரங்களாக ஆலோசனை நடத்தி வருவதாக அவை கூறியுள்ளன. இதைத்தொடர்ந்து அமைச்சகங்களுக்கு இடையே விவாதிக்கப்பட்டு பின்னர் மந்திரிசபை ஒப்புதலும் தேவைப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.