ஸ்ரீநகர்,
காஷ்மீரில் இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த மாதம் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் காயமுற்றார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 15ந்தேதி காலை உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து பிரிவினைவாத அமைப்புகள் இன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில், காஷ்மீரில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் இன்று ஒரு நாள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டு உள்ளன. பல தனியார் பள்ளிகள் இன்று வேலை நாள் கிடையாது என பெற்றோரிடம் அறிவித்து விட்டன.
இதேபோன்று காஷ்மீர் பல்கலை கழகத்தின் அனைத்து தேர்வுகளும் இன்று ஒத்தி வைக்கப்பட்டன. தேர்வு நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.