புதுடெல்லி,
கார் உற்பத்தி சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மாருதி சுசூகி, பலேனா மற்றும் புதிய ஸ்விப் மாடல் கார்கள் 52,856- ஐ திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பிரேக் வேக்கம் ஹோஸில் (brake vacuum hose) கோளாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதால், மேற்கூறிய இரு மாடல் கார்களையும் ஆய்வு செய்ய திரும்ப பெறுவதாக நிறுவனம் அறிவித்து உள்ளது.
டிசம்பர் 1,2017 முதல் மார்ச் 16,2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக கார்கள், ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 14 ஆம் தேதி முதல், குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை வாங்கிய கார் உரிமையாளர்கள், டீலர்களை தொடர்பு கொண்டு கார்களை ஆய்வுக்கு உட்படுத்தி, சீர் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த சேவை செய்யப்படும் என்று மாருதி சுசூகி அறிவித்து உள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் பலேனா மாடல் கார்கள் திரும்ப பெறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த மே 2016 ஆம் ஆண்டு ஏறத்தாழ 75,419 கார்களை, ஏர்பேக்கில் பிரச்சினை இருப்பதாக கூறி திரும்ப பெற்றது நினைவிருக்கலாம்.