தேசிய செய்திகள்

எம்.பி. சம்பள தொகையை விவசாயிகளின் மகள்களுக்கு வழங்க முடிவு; ஹர்பஜன் சிங்

ராஜ்ய சபை எம்.பி.யான ஹர்பஜன் சிங் தனது சம்பள தொகையை விவசாயிகளின் மகள்களுக்கான கல்வி மற்றும் பிற நலன்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.

சண்டிகர்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.  கடந்த மார்ச்சில் நடந்த ராஜ்யசபை உறுப்பினர் தேர்தலில் அக்கட்சி சார்பில் 5 பேர் எம்.பி. பதவிக்கு நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் போட்டியின்றி நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது.  பெருவாரியான இடங்களில் பெற்ற வெற்றியால், மேலவையில் 5 இடங்களையும் அக்கட்சி பெற முடிந்தது.

5 உறுப்பினர்களில் ஒருவரான ஹர்பஜன் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், என்னுடைய எம்.பி. பதவிக்கான சம்பள தொகையை விவசாயிகளின் மகள்களுக்கான கல்வி மற்றும் பிற நலன்களுக்கு வழங்குவதற்கு விரும்புகிறேன்.

நமது நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்றும் பணியில் நான் இணைந்துள்ளேன்.  என்னால் முடிந்த ஒவ்வொரு செயலையும் நான் செய்து முடிப்பேன்.  ஜெய்ஹிந்த் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT