புதுடெல்லி,
முஸ்லிம்கள் சமுதாயத்தினர் இடையே மனைவியிடம் திருமண முறிவை கணவர் தெரிவிப்பதற்கு உடனடி முத்தலாக் முறை (ஒரே நேரத்தில் 3 முறை கூறுவது) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, திருமணம் ஆன முஸ்லிம் பெண்களை மண முறிவில் இருந்து பாதுகாக்க முத்தலாக் கூறுவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றத் தயார் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
அதன் அடிப்படையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய மந்திரிகள் குழு, முஸ்லிம் பெண்கள் மசோதா (திருமணத்தில் உரிமைகளை பாதுகாப்பது) என்னும் சட்ட மசோதாவை தயாரித்தது. அந்த மசோதா நாளை (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
அதில், உடனடி முத்தலாக் அல்லது தலாக்இபிட்டாத் என்பதை எழுத்து வடிவத்திலோ, வாய்மொழியாகவோ அல்லது மின்னணு வழிமுறைகளான இமெயில், எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ் அப் உள்ளிட்ட எதன் மூலமும் தெரிவிப்பது சட்டவிரோதம் மற்றும் செல்லாது என்றும், இதை மீறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த மசோதாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.