தேசிய செய்திகள்

ஜெய்ப்பூர் ஏரியில் மர்மமான முறையில் 5 ஆயிரம் பறவைகள் இறப்பு

ஜெய்ப்பூர் ஏரியில் மர்மமான முறையில் 5 ஆயிரம் பறவைகள் இறந்து கிடந்தன.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சாம்பர் ஏரி மிகப்பெரியது ஆகும். இந்த ஏரிநீர் உப்பு தன்மை மிகுந்ததாகும். ஆண்டுதோறும் அங்கு வெளிநாடுகள் உள்பட பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த ஆண்டும் அதே போல் பல வகையான பறவைகள் வந்தன. அதில் திடீர் திடீர் என்று பல பறவைகள் மர்மமான முறையில் செத்து விழுந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறுகையில், சாம்பர் ஏரியில் 12 முதல் 13 கி.மீ பரப்பளவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ராஜேந்திர சாகர் கூறுகையில், இங்கு 10 வகைகளை சேர்ந்த சுமார் 1,500 பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏரி நீரில் விஷத்தன்மை, பாக்டீரியா ஏதும் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவக்குழுவினர் வந்து சோதனைக்காக இறந்த பறவைகள் மற்றும் ஏரிநீரை மாதிரிக்காக எடுத்து போபாலுக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அதன் அறிக்கை வந்த பின்பு காரணம் தெரியவரும் என்றார். ஏரியில் ஆங்காங்கே இறந்து கிடந்த பறவைகளை டிராலிகள் மூலம் அள்ளிச்சென்று ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டது. சுமார் 700 பறவைகள் ஒரே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT